2020-21 நிதியாண்டில் அடையாளம் தெரியாத அமைப்புகள் / தனிநபர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் ரூ.690.67 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் தங்களுக்கான நன்கொடைகளைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தம் எனும் அமைப்பு 2020-21ஆம் ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2020-21 நிதியாண்டில் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் மொத்தம் ரூ.690.67 கோடி நன்கொடை பெற்றது தெரிய வந்துள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையின்படி கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ.15,077.97 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன.
2020-21ஆம் ஆண்டு காலத்தில் 8 தேசியக் கட்சிகள் ரூ.426.74 கோடியும், 27 மாநிலக் கட்சிகள் ரூ.263.928 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி ரூ.178.78 கோடியும், பாஜக ரூ. 100.50 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.96.2507 கோடியுடன் முன்னிலையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து திமுக ரூ. 80.02 கோடியும், பிஜூ ஜனதா தளம் கட்சி ரூ.67 கோடியும், மகாராஷ்டிரம் நவநிர்மான் சேனா ரூ.5.773 கோடியும், ஆம் ஆத்மி கட்சி ரூ.5.4 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளன.