இமாசல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களில் 12 சதவீதம் பேர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், போட்டியிடும் அனைத்து 412 வேட்பாளர்களும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தினை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 412 வேட்பாளர்களில் 201 பேர் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 67 பேர் மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 45 பேர் பதிவு செய்யாத அமைப்புகளையும், 99 பேர் சுயேச்சைகளும் ஆவர்.
68 உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாசல பிரதேச பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவர்களில் 94 பேர், தங்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதில், 50 பேர் அதாவது 12 சதவீதம் பேர் மீது மிக மோசமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐந்து பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களும், இரண்டு பேர் மீது கொலை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
ஹிமாசலில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளன. ஆளும் கட்சி தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றும் நோக்குடன் பாஜக களமிறங்கியுள்ளது. அதேசமயம், பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் ஆர்வத்துடன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மியும் களம் காண்பதால் மும்முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.