Source: 
Author: 
Date: 
17.01.2019
City: 

புதுடெல்லி: காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த நன்கொடையை விட பாஜ.வுக்கு 12 மடங்கு அதிக நன்கொடை கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.கடந்த நிதியாண்டில், தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2017-18ம் நிதியாண்டில், தேசிய கட்சிகள் பெற்ற ₹20,000க்கு மேற்பட்ட நன்கொடைகள் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் ₹469.89 கோடி நன்கொடை தரப்பட்டுள்ளது. இதில் பாஜவுக்கு மட்டும்  ₹437.04 கோடி தரப்பட்டுள்ளது. காங்கிரஸ் ₹26.65 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக புருடென்ட் எலக்ட்ரால் டிரஸ்ட் என்ற அமைப்பு ₹164.30 கோடி நிதி அளித்துள்ளது. 

அந்த அமைப்பு பாஜ.வுக்கு ₹154.30 கோடியும், காங்கிரசுக்கு  ₹10 கோடியும் தந்துள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெற்ற மொத்த  நன்கொடையை விட பாஜ பெற்ற நன்கொடை 12 மடங்கு அதிகம். 90 சதவீத நன்கொடைகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்தவை. மீதமுள்ள 10 சதவீதம் தனிநபர்கள் கொடுத்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும்  வர்த்தக நிறுவனங்கள் பாஜவுக்கு ₹400.23 கோடியும், காங்கிரசுக்கு ₹19.29 கோடியும் நன்கொடை அளித்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி தனக்கு ₹20,000க்கு மேற்பட்ட நன்கொடை எதுவும் வரவில்லை என கணக்கு தாக்கல் செய்துள்ளது. தேசிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில், டெல்லியிலிருந்து ₹208.56 கோடியும்,  மகாராஷ்டிராவில் இருந்து ₹71.93 கோடி, குஜராத்தில் இருந்து ₹ 44.02 கோடியும் வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ₹122 கோடி செலவு
சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான செலவு கணக்கைல தேர்தல் ஆணையத்தில் பாஜ தாக்கல் செய்துள்ளது. அதில், கர்நாடகாவில் பிரசாரத்திற்காக ₹122 கோடியை செலவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளது. இதே, வடகிழக்கு மாநிலங்ளான மேகாலயா (₹3.8 கோடி), திரிபுரா (₹6.96 கோடி), நாகலாந்தில் (₹3.36 கோடி) மொத்தம் ₹14.18 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method